போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ள சிவகிரி-விஸ்வநாதப்பேரி தார்ச்சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகிரியிலிருந்து விஸ்வநாதப்பேரிக்குச் செல்லும் தார்ச்சாலையானது கொத்தாடப்பட்டி வளைவுப்பாலம் வரை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. அதனால், இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
குறிப்பாக, மழைக்காலங்களில் இச்சாலையில் பயணிக்கவே முடியாத நிலைதான் காணப்படுகிறது.
வடுகபட்டி, தென்மலை வழியாக சங்கரன்கோவில் மற்றும் ராயகிரி, ராமநாதபுரத்துக்குச் செல்லும் முக்கியச் சாலையாக இது இருப்பதால், தினந்தோறும் இதன்வழியாக இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் மிக அதிகம். இச்சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் எதிரெதிர் திசையில் பேருந்துகள் வந்தாலும், அவை விலகிச் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் உள்ளது. பள்ளி செல்லும் மாணவர், மாணவிகளும் இந்த வழியாகத்தான் நாள்தோறும் பயணம் மேற்கொள்கின்றனர். நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் விஸ்வநாதப்பேரியிலிருந்து கொத்தாடப்பட்டி வளைவுப் பாலம் வரை புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்டு, அத்துடன் பணிகள் பாதியுடன் நிறுத்தப்பட்டன.
எனவே, சிவகிரி பேருந்து நிலையப் பகுதியிலிருந்து கொத்தாடப்பட்டி வளைவுப்பாலம் வரை புதிய தார்ச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.