கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி அருள்மிகு சந்தனமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பூக்குழி திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் பூக்குழி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுடன் தொடங்கியது. அன்றுமுதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் விரதம் மேற்கொண்டு வந்தனர். இதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை அன்னதானமும், வியாழக்கிழமை தீர்த்தம் எடுத்து வருதலும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
மாலையில் முளைப்பாரி, அக்னிச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.