படைப்புழு தாக்குதல் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சிக்கு வேளாண்மை இணை இயக்குநர் வே.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) தூ.இசக்கியப்பன் வரவேற்றார்.
வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) எஸ்.ஐ.முகைதீன், மக்காச்சோளம் பயிரிட்டுள்ள வட்டாரங்களில் ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக விளக்கினார். வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம் ) உத்தண்டராமன், மக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதன் வழிமுறைகளைப் பற்றி விவரித்தார்.
வேளாண்மை அறிவியல் மைய பூச்சியியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன், படைப்புழு கட்டுப்பாட்டு மேலாண்மை தொழில்நுட்பங்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அப்போது அவர் மேலும் பேசுகையில், "தொடர்ந்து ஆழமாக உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்கள் வெளிப்படும்போது சூரிய ஒளி மற்றும் பறவைகளால் அவை அழிக்கப்படும். அதனால் அந்துப்பூச்சிகள் உருவாக்குதலை தடுக்க முடியும். உழவு செய்யும்போது ஏக்கருக்கு 250 கிலோ வேப்பம் பிண்ணாக்கு மண்ணில் இடுவது பயன்தரும். பயிர் இடைவெளியை அதிகரிப்பதன் மூலமும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த இயலும்.
இறவை மக்காச்சோளத்துக்கு 60ஷ்12 செ.மீ. இடைவெளியும், மானாவாரி மக்காச்சோளத்துக்கு 45ல20 செ.மீ. இடைவெளியும் அவசியம்.
இயற்கை ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகளை ஊக்குவிக்க குறுகிய காலப்பயிர்களான தட்டைப் பயறு, சூரியகாந்தி, எள் ஆகியவற்றை வரப்பு மற்றும் ஊடு பயிராக பயிரிட்டால் அந்துப் பூச்சிகளின் முட்டைக் குவியல்களை சேகரித்து அழிக்கலாம்' என்றார்.