கரிவலம்வந்தநல்லூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் பழ வியாபாரி உயிரிழந்தார்.
ராஜபாளையம் அருகே உள்ள மேலாண்மறைநாட்டைச் சேர்ந்தவர் கனி (56), பழ வியாபாரி. இவர், தன் மனைவி ராஜலட்சுமியுடன் (51) கடந்த 1ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் திருவேங்கடத்தில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
சத்திரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, சிவகாசியிலிருந்து புதுசுப்புலாபுரத்தைச் சேர்ந்த அருளானந்தன் மகன் மனோகரன் (54) வந்த மோட்டார் சைக்கிளும், கனியின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதனால், 2 வாகனங்களில் வந்தவர்களும் தூக்கிவீசப்பட்டனர்.
இதில், பலத்த காயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு அவர்கள் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கனி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
விபத்து குறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல் ஆய்வாளர் சித்ரகலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.