வாசுதேவநல்லூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
வாசுதேவநல்லூர் காவல் ஆய்வாளர் கலா மற்றும் போலீஸார் சனிக்கிழமை எஸ்.டி. நகர் மற்றும் இருளப்பசாமி கோயில் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர், ஜீப் ஆகியவற்றை போலீஸார் மறித்தபோது, அதன் ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டுத் தப்பியோடிவிட்டனராம்.
இதையடுத்து, வாகனங்களைக் கைப்பற்றி போலீஸார் விசாரித்ததில், தப்பியோடியவர்கள் டிராக்டர் ஓட்டுநரான ஆத்துவழியைச் சேர்ந்த துரை மகன் பிரித்விராஜ் மற்றும் ஜீப் ஓட்டுநர் வாசுதேவநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த அய்யாக்குட்டி மகன் கண்ணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
புளியங்குடி: புளியங்குடியில் கடந்த வாரம் அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்து, லாரி உரிமையாளர் திரிகூடபுரத்தைச் சேர்ந்த மாடசாமியை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக அவரது மகன்கள் சிவசங்கரன், சிவப்பிரகாஷ், சொக்கம்பட்டி தண்ணீர் பந்தல் தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் கார்த்திக் குமார் (25) ஆகியோரை தேடி வந்தனர்.
இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் குருச்சந்திர வடிவேல் மற்றும் போலீஸார் சிந்தாமணி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கார்த்திக் குமாரை கைது செய்தனர். மற்ற இருவரை தேடிவருகின்றனர்.