தென்காசி அருகே தரம் உயர்த்தப்பட்ட சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பள்ளி கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி பள்ளி கல்வி மற்றும் மேலாண்மை குழுத் தலைவர் ப.சட்டநாதன் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மற்றும் மாநில பள்ளி கல்வி இணை இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு:
சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டாகியும் நிரந்தர தலைமையாசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து கடந்த 10-09-2018, 12-11-2018 ஆகிய தேதிகளில் அனுப்பிய மனுக்களுக்கு இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இப் பள்ளி இருக்கும் சுற்றுப்புற கிராமங்களில் ஏழை, எளிய பாமரர்களும் விவசாய கூலிகளும் அதிகமாக வசிப்பதால் பெரும்பாலான மாணவர்கள் வணிகவியல் பாடப்பிரிவுகளையே மிகவும் விரும்புகின்றனர்.
வரும் கல்வியாண்டிலிருந்து வணிகவியல் பாடப்பிரிவு தொடங்க அனுமதி வழங்க வேண்டும், அலுவலக இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவுகாவலர், துப்புரவு பணியாளர் நியமிக்க வேண்டும், பள்ளி கூடுதல் கட்டடம் கட்டப்பட வேண்டும். இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் பள்ளி திறக்கும் நாளான ஜூன் 3ஆம் தேதி அறவழியில் பள்ளி முன்பாக உண்ணாவிரதம் இருக்க உள்ளேன் என்றார் அவர்.