வடக்கு தில்லியில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளி மற்றும் விடுதியில் தில்லியின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கெளதம் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:
கிங்ஸ்வே கேம்ப் பகுதியில் அமைந்துள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி மற்றும் விடுதியில் மாணவர்களுக்கான வசதிகள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பால் ஆய்வு நடத்தினார். அந்தப் பள்ளியில் தற்போது 140 மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர்.
பள்ளி மற்றும் விடுதியின் சுத்தம், படுக்கை வசதி, மாணவர்களுக்கான புத்தகங்கள், உடைகள், உணவுகள் உள்ளிட்ட வசதிகள் தொடர்பாக அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு முடிவில் மாணவர்களுக்கான வசதிகள் முறையாக பராமரிக்கப்படுவதாக அவர் திருப்தி தெரிவித்தார் என்று அந்த அதிகாரி கூறினார்.