கடையத்தில் தீப்பிடித்து எரிந்த புளியமரம் வியாழக்கிழமை முழுவதும் வெட்டி அகற்றப்பட்டது.
கடையம் ஜம்புநதி அருகில் ஊராட்சி குப்பைக் கிடங்கு கடந்த 13ஆம் தேதி தீப்பிடித்ததில் அருகிலிருந்த புளியமரமும் முழுமையாக எரிந்தது. இதனால், மரம் பழமிழந்து எந்நேரத்திலும் சாய்ந்து விழலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவ்வழியாக சென்ற மின்கம்பியை பாதுகாப்புக் கருதி மின்வாரியத்தினர் அகற்றியதால், தெற்குக் கடையம், கீழக்கடையம் ஊராட்சிக்கு மின்விநியோகம் பாதிக்கப்பட்டு, குடிநீர் வழங்க முடியவில்லை.
எனவே, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான அந்த புளியமரத்தை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடப்பட்டது. அதையேற்று, அறநிலையத்துறையினரால் அந்த மரம் வியாழக்கிழமை வெட்டி அகற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் மின் இணைப்புக் கொடுக்கப்பட்டு, தெற்குக் கடையம், கீழக்கடையம் ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.