பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 6 மணிக்கு பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, புண்யாகவாஜனம், மூலமந்த்ர ஜப ஹோமம், வேதபாராயணம், மகா பூர்ணாஹுதி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
மாலை 3 மணிக்கு 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூக்த ஹோமம், மன்யு சூக்த ஹோமம், புருஷ சூக்த ஹோமம் மற்றும் 12 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதல், நரசிம்மருக்கு சிறப்பு அலங்காரத்தில் சகஸ்கர நாம அர்ச்சனை, விசேஷ தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹர பீடத்தினர், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.
சுரண்டை: சாம்பவர்வடகரை சிவன் கோயிலில் ஸ்ரீநரசிம்மர் ஜெயந்தியையொட்டி, மேற்கு பார்த்த முகமாக அருள்பாலிக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பானகம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.