திருநெல்வேலியை அடுத்த சிவந்திப்பட்டி சாலையில் உள்ள ஸ்ரீ தக்ஷின் ஷீரடி சாய் கோயிலில் முதலாவது ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வருஷாபிஷேக விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு 1,008 சங்கு பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்ஷன ஹோமம், லட்சுமி ஹோமம், விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம், சாயி மூலமந்த்ர ஹோமம் ஆகியன நடைபெற்றன.
முற்பகல் 11 மணிக்கு கோ பூஜை, சுபாஷினி பூஜை, கன்னிகா பூஜை, தம்பதி பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, விமான அபிஷேகம், மூர்த்தி அபிஷேகம், 1,008 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. நீண்ட நாள்களாக குழந்தை இல்லாத பெண்களுக்கு தனியாக பூஜை நடத்தப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் மாங்கனி வழங்கப்பட்டது.
பகல் 12 மணிக்கு மதிய ஆரத்தி, வேதபாராயணம், புஷ்பாஞ்சலி, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதேபோல் மழை வேண்டியும் பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 6 மணிக்கு மாலை ஆரத்தி, 6.30 மணிக்கு பஜனை நடைபெற்றது. பக்தர்களின் நலன் கருதி வேளாங்கண்ணி மருத்துவமனை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வருஷாபிஷேக விழா ஏற்பாடுகளை ஷீரடி சாய் ஆன்மிக மைய நிர்வாகிகள் செய்திருந்தனர்.