தமிழகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தலைமையாசிரியர்கள், தனியார் பள்ளிகளின் முதல்வர்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலா பேசியது:
2019-20 ஆம் கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில், பள்ளி வளாகங்களை மிகவும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவர் விவரங்களை எமிஸ் எனப்படும் இணையவழி பதிவு செய்யும்போது மாணவர்களின் சுயவிவர குறிப்புகள், ஆசிரியர், பள்ளி விவரங்களை முறையாக குறிப்பிட வேண்டும் என்றார். இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.