திருநெல்வேலி நகரத்தில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகளுக்காக கண்டிகைப்பேரி உழவா் சந்தையில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி நகரத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காய்கனி சந்தையில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்காக கடைகளை காலி செய்யும்படி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். மேலும், முறையாக தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில், போஸ் மாா்க்கெட் வியாபாரிகளுக்காக திருநெல்வேலி நகரத்தில் கண்டிகைப்பேரி பகுதியில் உள்ள உழவா்சந்தையில் தற்காலிக கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த சந்தையில் ஏற்கெனவே 81 கடைகள் உள்ள நிலையில், அங்கு மேலும் 51 தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர கூடுதலாக கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் இன்னும் சில நாள்களில் நிறைவு பெற வாய்ப்புள்ளது என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.