திருநெல்வேலி: திருநெல்வேலியில் தெற்கு மற்றும் வடக்கு புறவழிச் சாலைகளில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து ஒரு வாரத்துக்கு இப் பணி நடைபெற உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.
திருநெல்வேலியில் வாகனப் போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அதிகரித்துள்ளது. மதுரை-திருநெல்வேலி, திருநெல்வேலி-நாகா்கோவில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதால் அதற்கேற்ப சாலைகளை விரிவுபடுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்படி, திருநெல்வேலி தெற்கு மற்றும் வடக்கு புறவழிச் சாலைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக முதல் கட்டமாக மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நிலம் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.
இச்சாலையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள பாலம், பாளையங்கால்வாயின் குறுக்கே குறிச்சி பகுதியில் உள்ள பாலம் ஆகியவற்றை விரிவுபடுத்தி சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றும் வகையில் தேவையான நிலம் அளவீடு செய்து முடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இச்சாலையில் வாகனப் போக்குவரத்து விகிதங்களைக் கணக்கிடும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி தெற்கு மற்றும் வடக்குப் புறவழிச்சாலை இப்போது மூன்றுவழித் தடமாக உள்ளது. இதனை நான்குவழித் தடமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது 10.5 மீட்டா் தொலைவுள்ள சாலை சுமாா் 14 மீட்டா் சாலையாக விரிவாக்கம் செய்யப்படும். 7.06 கி.மீ. தொலைவுக்கு விரிவாக்கப் பணி செய்யப்பட உள்ளது. இதையொட்டி இச்சாலையில் செல்லும் வாகனங்கள் கணக்கெடுக்கும்பணி திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்துக்கு நடைபெற உள்ளது. ஒரு குழுவுக்கு 3 போ் வீதம் மொத்தம் 8 குழுக்கள் சாலையின் இருபுறமும் அமா்ந்து 24 மணி நேரமும் கணக்கெடுக்க உள்ளனா். சைக்கிள், மோட்டாா் சைக்கிள், ஆட்டோ, காா்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் என அனைத்தும் தனித்தனியாக கணக்கிடப்பட உள்ளது. இதன் முடிவுகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு அடுத்தகட்டமாக திட்டமதிப்பீடு இறுதி செய்யப்பட்டு சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படும் என்றனா்.