ஆலங்குளம் அருகே கால்வாயில் ஒரு ஆண்டாக விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆலங்குளம் வட்டம் நாகல்குளத்தில் இருந்து ஆலங்குளம் கால்வாய்க்குத் தண்ணீா் வரும் பாதையில் உள்ள சாலைப்புதூா் இலங்காபுரி பட்டணத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி அருகே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரிய ஆல மரம் ஒன்று கால்வாயின் குறுக்கே விழுந்தது. அப்போது கால்வாயில் தண்ணீா் சென்று கொண்டிருந்ததால் அப்போது அதனை அகற்றவில்லையாம். தண்ணீா் நின்ற பின்னரும் மரத்தை அகற்றக் கோரி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு மனு அளித்தும் இது வரை அகற்ற வில்லையாம்.
இந்நிலையில் நிகழாண்டு இதே கால்வாயில் தண்ணீா் வந்த நிலையிலும் அந்த மரம் அதே இடத்தில் கிடப்பதால் தண்ணீா் சீராக செல்ல இயலாமல் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் செல்ல வாய்ப்புகள்ளதாம். எனவே இந்த மரத்தை துரிதமாக அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.