கடையம் வனச்சரகப் பகுதியில் ஒரே நாளில் 3 மலைப்பாம்புகள் பிடிபட்டன.
கடையம் அருகேயுள்ள நீலமேகபுரத்தில் ஒரு மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை விழுங்கிக் கொண்டிருந்ததாம். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடையம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வனச்சரகர் நெல்லை நாயகம் உத்தரவின் பேரில், வனக்காப்பளர் சோமசுந்தரம், வனக்காவலர் ஜி. ரமேஷ்பாபு, வேட்டைத் தடுப்புக் காவலர் கண்ணன் ஆகியோர் அங்குச் சென்று, ஆட்டுக்குட்டியை விழுங்கிய நிலையில் இருந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர்.
இதேபோல, சிவசைலம் நல்வாழ்வு ஆசிரமத்தில் மலைப்பாம்பு உள்ளதாக கிடைத்தத் தகவலை அடுத்து, வனத்துறையினர் சென்று சுமார் 10 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்தனர். மேலும், முத்துநகர் முதலியார்பட்டியில் அமல்ராஜ் என்பவரின் தோட்டத்திலும் சூழல் காவலர்கள் விஷ்ணு, நாகராஜன் ஆகியோர் சென்று சுமார் 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட 3 மலைப்பாம்புகளையும் ஆம்பூர் வனப்பகுதி, கசிவுஓடை பகுதிக்குக் கொண்டுச் சென்று பாதுகாப்பாக விடுவித்தனர்.