திருநெல்வேலி அருகேயுள்ள அருகன்குளம் பகுதியில் தாமிரவருணி தூய்மைப் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குள்பட்ட அருகன்குளம் ஜடாயு தீர்த்தக்கட்டம் அருகே தூய்மைப்பணியினை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் புதன்கிழமை தொடங்கி வைத்து பேசியது: வற்றாத ஜீவநதியான தாமிரவருணியைப் பாதுகாத்திடும் வகையில் 60 கி.மீ. தொலைவுக்கு தூய்மைப்பணி செய்யப்படுகிறது.
பேரூராட்சி, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களும் நதியை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சார் ஆட்சியர் மணீஷ்நாரணவரே, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.