திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே அடவிநயினார் அணையில் குளித்தபோது காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
செங்கோட்டை அருகேயுள்ள வடகரை பகுதியைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது மகன் ஜாஹிர்உசேன் (18) . இவர், தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் முதலாமாண்டு படித்து வந்தார். அடவி நயினார் அணை நிரம்பியதை அடுத்து, ஆக. 29 ஆம் தேதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. அப்போது, ஜாஹிர்உசேன், தனது நண்பர்களுடன் அணையில் குளிப்பதற்காக சென்றாராம்.
அங்கு, அணையில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் ஜாஹிர்உசேனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து அச்சன்புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.