ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞரை கொலை செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு தென்காசி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). இவரது மகன் சொரிமுத்து (26). சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கும், இப்பகுதியைச் சேர்ந்த ரவி (27), மூக்கையா, வைத்திலிங்கம், சுப்பிரமணியன் மற்றும் ரவி ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாம்.
18-04-2014அன்று சுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியிலுள்ள கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த ரவி, மூக்கையா, வைத்திலிங்கம் ஆகியோருக்கும் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சொரிமுத்துவை ரவி அரிவாளால் வெட்டினாராம். இதில் சொரிமுத்துக்கு காயம் ஏற்பட்டது.
ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்தனர். இவ்வழக்கு தென்காசி கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ரஸ்கின்ராஜ், கொலை செய்ய முயன்ற ரவிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையை செலுத்த தவறினால் 2 மாதம் மெய்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் எஸ். ராமசந்திரன் ஆஜரானார்.