ஆலங்குளம் வட்டாட்சியர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கடையடைப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையடுத்து சாலையோரம் வாறுகால் அமைக்க வேண்டும்; சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; பேவர் பிளாக் சாலைக்குப் பதிலாக தார்ச் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வட்டாட்சியர் கந்தப்பன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடு செய்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
எடுப்பது, பேவர் பிளாக் சாலை அமைக்க அறிக்கை அனுப்பப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பேவர் பிளாக் அமைக்கும் திட்டத்தில் மாற்றம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடையடைப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், சங்கரகுமார், காவல் உதவி ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், ராஜசேகரன், நகர காங்கிரஸ் தலைவர் தங்கச்செல்வம், வட்டாரத் தலைவர் அலெக்சாண்டர், பாஜக முன்னாள் ஒன்றிய பொதுச்செயலர் கந்தசாமி, நாடார் சங்கத் தலைவர் கனிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.