திருநெல்வேலியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
மத்திய அரசின் பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக திருநெல்வேலி நகரத்தில் உள்ள பொருள்காட்சி திடலில் உள்ள வ.உ.சி. நினைவு பூங்கா அருகேயுள்ள காலி இடத்தில் மாற்றம் செய்யவுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அங்கு தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியது. இப்பணியை மாநகராட்சி ஆணையர் விஜயலட்சுமி பார்வையிட்டார். இங்கு பயணிகள் நிழற்குடை, சுகாதார வளாகம், புறக்காவல் நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. இப்பணிகள் இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவடையும் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.