அஞ்சல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் (என்.இ.பி.இ.) மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இச்சங்கத்தின் 38-ஆவது திருநெல்வேலி கோட்ட மாநாடு பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோட்டத் தலைவர் ஏ.சீனிவாச சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஜி.கண்ணன், கோட்டச் செயலர் எஸ்.கே.ஜேக்கப்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் எஸ்.இளங்கோவன், டி.அழகுமுத்து, ஆர்.வி.தியாகராஜபாண்டியன், வி.தங்கராஜ், இ.காசிவிஸ்வநாதன், ஐ.ஞானபாலசிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்: அஞ்சல் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும்; தபால்காரர், எழுத்தர் தேர்வுக்கான பாடத்திட்டத்தை எளிமையாக்க வேண்டும்; பண்டிகைக் கால முன்பணம் வழங்க வேண்டும்; இடமாறுதல் கோரும் ஊழியர்களின் விண்ணப்பங்களை தாமதமின்றி பரிசீலித்து உடனடியாக வழங்க வேண்டும்; பணிமூப்பு அடிப்படையில் எம்.டி.எஸ். பொறுப்பில் இருந்து தபால்காரர் பதவி உயர்வு அளிக்க வேண்டும்; மகாராஜநகர் அஞ்சலகத்திற்கு தபால் பிரிப்பாளர் பதவியை புதிதாக உருவாக்க வேண்டும்; வள்ளியூர் அஞ்சலகத்துக்கு புதிதாக கேஷ் ஓவர்சியர் பதவியை உருவாக்க வேண்டும்; பணகுடி, ராதாபுரம் அலுவலகங்களுக்கு கூடுதலாக தபால்காரர் பதவிகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.