மூத்தோர் தடகளப் போட்டிகள் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர் செந்தாமரைக்கண்ணன் தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கிவைத்தார். ஒருங்கிணைப்பாளர் மோயின்சன் வரவேற்றார். 100 மீட்டர், 200, 400, 800, 1200, 5000 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்பட 13 வகையான போட்டிகள் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடத்தப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 பேர் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பிடம் பெற்றவர்கள் நாகர்கோவிலில் அக்டோபர் 30, டிசம்பர் 1-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். வின்சென்ட் நன்றி கூறினார்.