நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, திருநெல்வேலி மாநகரப் பகுதியிலும் போலீஸார் சோதனையை அதிகப்படுத்தியுள்ளனர்.
நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 21 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இதையொட்டி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி ரொக்கத்தை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொகுதியில் பணப் பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பை அதிகரிக்க, வருவாய் மற்றும் காவல் துறையினர் சோதனைகளை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாநகரில் தச்சநல்லூர், கிருஷ்ணாபுரம், டக்கரம்மாள்புரம், பழையபேட்டை, கருங்குளம் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பின்பே மாநகருக்குள் நுழையவும், மாநகரில் இருந்து வெளியேறவும் அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல மாநகரப் பகுதியில் கட்சிகளின் விளம்பரங்களை மறைக்கும் பணிகளில் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.