தென்காசி அருகே விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற முயன்ற வழக்கில், அரசு பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கடையநல்லூர் அருகேயுள்ள சேர்ந்தமரம் மாடன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் அமல்ராஜ் பாண்டியன்(54). விவசாயி. இவர் குலசேகரமங்கலம் கண்மாயில் மேம்பாலம் கட்டுவதற்கு தடையில்லா சான்று கேட்டு தென்காசி சிற்றாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் விண்ணப்பித்தார். நேரில் கள ஆய்வு செய்வதற்கு ரூ.1.5 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என அங்குள்ள அரசு பொறியாளர் பொற்செழியன் கேட்டுள்ளார். இதற்கு அமல்ராஜ் பாண்டியன் மறுத்துள்ளார். முதலில் ரூ.50 ஆயிரம் தாருங்கள். மீதியை பிறகு தாருங்கள் என கூறியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறையில் அமல்ராஜ் பாண்டியன் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் அறிவுரைப்படி அமல்ராஜ் பாண்டியன், அரசு பொறியாளர் பொற்செழியனிடம் ரூ.50 ஆயிரத்தைக் கொடுத்த போது, அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை நீதிபதி பத்மா விசாரித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொற்செழியனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.