களக்காடு மலைப் பகுதியில் உள்ள பச்சையாறு கால்வாயில் உடைப்பு, விரிசல் காரணமாக தண்ணீர் வீணாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழைதான் நான்குனேரி வட்டத்தில் உள்ள பாசனக் குளங்களுக்கு நீராதாரம். இந்நிலையில், களக்காடு மலைப் பகுதியில் உள்ள செங்கல்தேரியில் இருந்து மணிமுத்தாறு பகுதிக்கும், களக்காடு பச்சையாற்றுக்கும் தண்ணீர் பிரிந்து செல்கிறது. இதில் பச்சையாற்றில் தண்ணீர் வரக்கூடிய கால்வாயில் சுமார் 2 கி.மீ தொலைவுக்கு உடைப்புகள், விரிசல்கள் ஏற்பட்டு தண்ணீர் வீணாக காட்டுப் பகுதிக்குள் பாய்கிறது. இதனால் பெருமழைக்காலங்களில் வெள்ளம் வரும்போது மட்டுமே பச்சையாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. பொதுவாக, பருவமழை தீவிரமடையும் ஓரிரு நாள்கள் மட்டுமே பச்சையாற்றில் வெள்ளம் வரும். மீதமுள்ள நாள்களில் மிதமான தண்ணீரே ஓடும்.
கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வரும் நிகழ்வு கடந்த 5ஆண்டுகளில் அதிகரித்துள்ளதால் களக்காடு நகர்ப் பகுதிக்குள் வரும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக வடக்குப் பச்சையாறு அணை நிரம்பாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் இந்த அணையின் மூலம் பாசனம் பெறும் களக்காடு, நான்குனேரி வட்டாரங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் நிரம்பாமல் விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மலைப் பகுதியில் பச்சையாற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க சிறப்பு நிதி ஒதுக்கினால் மட்டுமே இனிவரும் காலங்களில் களக்காடு, நான்குனேரி பகுதியில் விவசாயம் தொய்வின்றி நடைபெறும் என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.