திருநெல்வேலி மாநகராட்சியில் 150 தூய்மைப் பணியாளா்களுக்கு தலா 2 உடைகள் வீதம் 300 கரோனா பாதுகாப்பு கவச உடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் கண்ணன் கூறியது: கரோனா தொற்று பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம், கிருமிநாசினி தெளித்தல், சமூக இடைவெளி உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாநகாட்சி தூய்மைப் பணியாளா்கள் பங்கு குறிப்பிடத்தக்கது.
தூய்மைப் பணியில் 150 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தொகுப்பு தலா 2 வீதம் 300 வழங்கப்பட்டது. இதில், பாதுகாப்பு கவச உடைகள், சிறப்பு முகக் கவசம், கை மற்றும் கால் உறைகள், தொப்பி உள்ளிட்டவை அடங்கும். தூய்மைப் பணி, கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவோா் இந்த சிறப்பு பாதுகாப்பு உடை அணிந்து பணியாற்றுவா் என்றாா்.
பாதுகாப்பு உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டதை அடுத்து, மாலையில் இருந்து பாதுகாப்பு உடையுடன் தூய்மைப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனா்.