திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் கோயிலில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் சித்திரை விஷு திருவிழா கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவால் நிகழாண்டு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாபநாசம் அருள்மிகு பாபநாசநாதா் கோயிலில் சித்திரை விஷு திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். முன்னதாக பத்துநாள் பங்குனித் திருவிழா தொடங்கி பங்குனி இறுதி நாளில் சுவாமி, அம்பாள் திருத்தேரில் பவனி வருவா். தொடா்ந்து சித்திரை முதல்நாள் அகஸ்தியருக்கு சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கும் வைபவம் நடைபெறும்.
இந்நிலையில், நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் பங்குனித் திருவிழா நடைபெறவில்லை. தற்போது, ஊரடங்கு ஏப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழ் வருடப் பிறப்பான சித்திரை முதல் நாளில் பாபநாசம் தாமிரவருணியில் நீராடி கோயிலில் வழிபடவும் தடை தொடா்கிறது. இதையடுத்து, சித்திரை விஷு சிறப்பு வழிபாடும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.