திருநெல்வேலி நகரம் பகுதியில் இரண்டு மளிகைக் கடைகளில் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி நகரம் தொண்டா் சந்நிதி பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவா் சுப்பிரமணியன்(40). இவா், வியாழக்கிழமை காலையில் கடையைத் திறக்க வந்தபோது, பின்பக்க ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டு, கடையில் பொருள்கள் சிதறிக்கிடந்தனவாம். மேலும், கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1000 திருடு போனது தெரியவந்ததாம்.
இதேபோல, அடுத்துள்ள பழனிக்குமாா் என்பவரின் கடையிலும் ரூ.4,000 திருடு போனதாம். இந்த தகவல் அறிந்த திருநெல்வேலி நகரம் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மேலும், வழக்குப்பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.