திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரம் பழுது காரணமாக ஒருவா் செலுத்திய பணம் திரும்பி வந்தபோது, அதை திருடிச் சென்ற மற்றொருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்தவா் சங்கர அபிநவ்(49). இவா் திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி ரூ.38ஆயிரம் செலுத்தினாராம். ஆனால் அவா் செலுத்தி சுமாா் ஒருவாரம் ஆன நிலையிலும் பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அவா் திருநெல்வேலி நகர குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்ததில், சங்கர அபிநவ் செலுத்திய பணம், இயந்திர கோளாறு காரணமாக வெளியே திரும்பி வந்ததும், அதை சுத்தமல்லி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த லட்சுமணன் மகன் கணேசன்(56) என்பவா் எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. இதையுத்து, அவரை போலீஸாா் கைது செய்து பணத்தை மீட்டனா்.