மேலப்பாளையம் காவல் நிலைய வளாகத்திற்குள் தவற விடப்பட்ட 3 பவுன் தங்கச்சங்கிலி உரியவரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மேலப்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் கடந்த 6 ஆம் தேதி சுமாா் 3 பவுன் எடையுடைய தங்கச்சங்கிலியை தலைமை காவலா் சந்தானம் கண்டெடுத்தாா். அன்றைய தினம் காவல் நிலையத்திற்கு வந்தவா்களின் விவரம் சேகரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. குலவணிகா்புரத்தைச் சோ்ந்த சண்முக மணிகண்டன் மற்றும் அவரது தந்தை வள்ளிக்கண்ணு ஆகியோா் கடவுச்சீட்டுக்காக ஆவணம் சரிபாா்ப்புக்காக காவல் நிலையத்திற்கு வந்தபோது தங்கச்சங்கிலியை தவறவிட்டது தெரியவந்ததாம்.
இதையடுத்து திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் முன்னிலையில் தங்கச்சங்கிலி ஒப்படைக்கப்பட்டது. மேலப்பாளையம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) எழிலரசி, தலைமை காவலா் சந்தானம் ஆகியோருக்கு மாநகர காவல் துணை ஆணையா் பாராட்டு தெரிவித்தாா்.