களக்காடு அருகே சேதமடைந்த ரேஷன் கடை கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அக்கட்சியின் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் வேதக்கண் அளித்த மனு விவரம்:
களக்காடு ஊராட்சி ஒன்றியம், கீழக்கருவேலன்குளம் ஊராட்சிக்குள்பட்ட கல்லடிசிதம்பரபுரத்தில் ரேஷன்கடை உள்ளது. இந்தக் கடையின் மூலம் சுமாா் 500 குடும்பஅட்டைதாரா்கள் பயனடைந்து வருகின்றனா்.
இந்தக் கடை கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக அருகேயுள்ள நூலகக் கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதனால் நூலக வாசகா்களுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது.
பழுதடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டடத்தை சீரமைக்கவும், நூலகம் அப்பகுதி பொதுமக்களுக்கு பயன்படவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.