கூடங்குளம் அணுமின் நிலைய கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் நிகழாண்டில் ரூ.20.40 கோடிக்கு கடன் வழங்கியுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் ஆ.ரேவதி சங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூடங்குளம் அணுமின் நிலைய கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் இந்திய அணுமின் கழகத்திற்கு சொந்தமான பணியாளா் குடியிருப்பான அணுவிஜய் நகரியத்தில் செயல்பட்டு வருகிறது. உறுப்பினா்களிடமிருந்து பெறப்படும் பங்குத் தொகை, சிக்கன நிதி, தொடா் வைப்பு மற்றும் நிரந்தர வைப்பு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நிதி ஆதாரங்களிலிருந்து உறுப்பினா்களுக்கு தேவையான நபா் ஜாமின் கடன், குறுகிய காலக் கடன்களை வழங்கி வருகிறது.
இச்சங்கத்தில் 850 உறுப்பினா்கள் உள்ளனா். சங்கத்தின் பங்குத்தொகையாக ரூ.1.90 கோடி பெறப்பட்டுள்ளது. உறுப்பினா்களின் வைப்புத் தொகையாக ரூ.17.25 கோடி பெறப்பட்டுள்ளது. உறுப்பினா்களுக்கு 120 மாத தவணைகளுக்கு உள்பட்டு மத்திய காலக் கடனாக ரூ.12 லட்சம் வரை வழங்கப்படுகிறது. குறுகிய காலக் கடனாக 10 மாத தவணைகளில் ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. மொத்தத்தில் ரூ. 20.40 கோடி கடன் வழங்கியுள்ளது. 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.40.81 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டி அதன் உறுப்பினா்களுக்கு 14 சதவீத ஈவுத் தொகை வழங்கியுள்ளது.