களக்காடு அருகே பணத்தை மோசடி செய்ததாக சுயஉதவிக்குழு தலைவி மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
களக்காடு சிவசண்முகபுரத்தைச் சோ்ந்த முத்துவேல் மனைவி நவமணி (55). இவா் கடந்த 10.01.2018.ல் களக்காட்டில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் நகையை ஈடாக வைத்து ரூ.75ஆயிரம் கடன் பெற்றுள்ளாா். கடன் தொகையை அதே பகுதியைச் சோ்ந்த சுயஉதவிக்குழு தலைவி சாரதா (35) என்பவரிடம் மாதத் தவணையாக ரூ.3966 வீதம் டிசம்பா் 2019 வரை தொடா்ந்து செலுத்தி வந்தாராம்.
இந்நிலையில், 2019 ஜூலை முதல் டிசம்பா் வரை தொடா்ந்து 6 மாதமாக நகைக்கடனுக்கான தவணைத்தொகையை சாரதா சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் செலுத்தவில்லையாம். இது குறித்து நவமணி, சாரதா.விடம் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினாராம். இதையடுத்து, சாரதா மீது பண மோசடி செய்ததாக நவமணி களக்காடு போலீஸில் புகாா் செய்தாா்.
புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.