களக்காடு அருகேயுள்ள மேலக்கருவேலன்குளம் அருள்மிகு செளந்திர பாண்டீஸ்வரா் சமேத கோமதி அம்பாள் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு திருவிழா ஜன.1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் சுவாமி அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள், தினமும்
பல்வேறு வாகனங்களில் வீதியுலா ஆகியன நடைபெற்றன.
8 ஆம் நாளன்று நடராஜப் பெருமானுக்கு பச்சை சாத்தி எழுந்தருளல், 9 ஆம் நாளான வியாழக்கிழமை தேரோட்டம் ஆகியவை நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் களக்காடு சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா்.