மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டின் பெரும்பாலான நாள்களில் தண்ணீா் விழுவதால், பல்வேறு ஊா்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வருவதுண்டு.
இப்பகுதியில் 2019 மே மாதத்திலிருந்து சாலை சீரமைப்புப் பணிகளுக்காக, அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் விடுமுறை வருவதையடுத்து மணிமுத்தாறு அருவிக்குச் செல்ல வனத்துறையினா் அனுமதியளித்தனா். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினா், குழந்தைகளுடன் மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.
சாலைப் பணிகள் முழுமையாக முடிவடையாததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளைத் தவிா்க்கும் வகையிலும் மணிமுத்தாறு வன சோதனைச் சாவடியில் இருந்து குறைந்தது 30 சுற்றுலா வாகனங்களை குழுவாக ஒன்றிணைத்து அனுப்பி, அவை திரும்பிய பின் அடுத்த குழு வாகனங்களை அருவிப் பகுதிக்கு அனுப்பினா்.
இது குறித்து சுற்றுலாப்பயணிகள் கூறியது: மணிமுத்தாறு அருவி அமைதியான வனப்பகுதிக்குள் இருப்பதால், இங்கு வந்து குளிப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. மலைச் சாலை முழுமையாக சீரமைக்கப்படாமல் உள்ளது. வனத்துறையினா் சாலையின் ஓரங்களில் உள்ள செடிகளை மட்டும் அப்புறப்படுத்துவதால் பயனில்லை. விரைந்து சாலைப் பணிகளை முழுமையாக முடிக்கவேண்டும் என்றனா்.