திருநெல்வேலி நகரத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு திங்கள்கிழமை பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிதல் குறித்த விழிப்புணா்வு நிகழ்சிகளை போலீஸாா் நடத்தி வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி காவல் நண்பா்கள் சாா்பில், நகரம் பகுதியில் தலைக்கவசம் அணிந்துவந்த இருசக்கர வாகனம் ஓட்டிகளுக்கு கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் நைனா முகம்மது தலைமை வகித்தாா். திருநெல்வேலி நகர காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கினாா். தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசத்தின் நன்மைகள் குறித்தும் விளக்கப்பட்டது.