திருநெல்வேலி சந்திப்பில் எரிவாயு கசிந்ததுகூட தெரியாமல் தூங்கிய நபரை தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து எழுப்பினர்.
திருநெல்வேலி சந்திப்புமேகலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், வெற்றிவேல் வெந்நீர் வைக்க எரிவாயு சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். வெந்நீர் வைத்ததை மறந்த வெற்றிவேல், சிறிது நேரத்தில் வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிவிட்டு அசந்து தூங்கிவிட்டார்.
நீண்ட நேரமாக வெந்நீர் கொதித்தால், தீ அணைந்தது. இதையடுத்து, சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டது. எரியு வாயு கசிந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதனால் பதறிப்போன பக்கத்து வீட்டினர் வெற்றிவேலை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை.
இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை வெற்றிவேல் மீது பீய்ச்சி அடித்தனர்.
இதனால் பதறி எழுந்த வெற்றிவேல், அதன் பின்னர் வீட்டின் கதவை திறந்தார். அதைத்தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற தீயணைப்பு வீரர்கள் ரெகுலேட்டரை அணைத்து, ஜன்னல் கதவுகளை திறந்துவிட்டனர். பக்கத்து வீட்டினரின் முயற்சியால் வெற்றிவேல் உயிர் தப்பினார்.