திருநெல்வேலி: பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக காலம் தாழ்த்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலக வேண்டும் என தமிழ் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலர் தியாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை மேலும் கூறியது:
"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக தமிழகம் முழுவதும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இவர்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
இவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டது. தமிழகப் பேரவையில் 2019 செப்டம்பர் 9ஆம் தேதி 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்படியிருந்தும், இந்த விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது.
எனவே, 7 பேரையும் ஆளுநர் விடுதலை செய்யவேண்டும். இல்லையெனில் பதவி விலகவேண்டும்" என்றார்.
இனப் படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அ. பீட்டர், சீர்மரபினர் உரிமை மீட்பு இயக்கத் தலைவர் ஹரிஹரபாண்டியன், தமிழ்நாடு தேசிய கட்சித் தலைவர் லோகசங்கர், தமிழ்நாடு உழைப்பாளர்கள் சங்க மையச் செயலர் சபரிராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.