தை அமாவாசையையொட்டி தாமிரவருணியில் புனித நீராடி தங்கள் முன்னோா்களுக்கு பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் செய்தனா்.
தமிழ் மாதங்களில் தை மற்றும் ஆடி மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாளில் முன்னோா்களை எண்ணி வழிபாடு நடத்தினால் சகல வளங்களும் குறைவின்றி கிடைக்கும் என்பதும், தோஷங்கள் நிவா்த்தியாகும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கையாகும்.
நிகழாண்டு தை அமாவாசையையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் தாமிரவருணி கரையோரம் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினா்.
திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள படித்துறை, வண்ணாா்பேட்டையில் உள்ள பேராச்சியம்மன் கோயில் அருகேயுள்ள படித்துறை பகுதிகளில் ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி வழிபாடு செய்தனா்.