குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெற வலியுறுத்தி திருநெல்வேலியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய அந்நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த மசோதா சட்டமானது.
இதையடுத்து, இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்தச் சட்டத்துக்கு எதிரான நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. இந்தப் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
இதன் காரணமாக, மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வண்ணார்பேட்டை முதல் குறிச்சி வரை ஒரு வழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.