தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சங்க கௌரவ செயலா் முத்துப்பாண்டியன், மாவட்டச் செயலா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாய பெருங்குடி மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் விவசாய நகைக் கடன் மற்றும் உழவா் காசுக் கடன்களை மிரா் அக்கவுண்ட் மூலம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்பதை மறு பரிசீலனை செய்து ஏற்கெனவே நடைமுறையில் உள்ளவாறு சங்கங்கள் மூலம் பட்டுவாடா செய்ய அனுமதிக்க வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு டிடிஎஸ்-இல் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படாத சங்கங்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
இந்தப் போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலகப் பணியாளா்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக கலந்துகொள்கிறாா்கள்.
இதன் காரணமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக நடைபெறும் நகைக் கடன், விவசாயக் கடன் வழங்கும் பணிகள், உரம் விநியோகம், பொது சேவை மைய பணிகள் நடைபெறாது என குறிப்பிட்டுள்ளனா்.