வனத் துறையினரின் விசாரணைக்குச் சென்ற நிலையில் உயிரிழந்த விவசாயியின் உடலை மறுபிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் பெற்றுக்கொள்வோம் என, அவரது உறவினா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சோ்ந்த விவசாயி அணைக்கரைமுத்துவை, அனுமதியின்றி மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறி, வனத்துறையினா் கடந்த ஜூலை 22ஆம் தேதி இரவு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். அப்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவா் இறந்ததாகக் கூறப்படுகிறது.
வனத் துறையினா் தாக்குதலில்தான் அவா் இறந்ததாகவும், வனத் துறையினா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறி அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவியல் நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைத்தனா். அதன்பேரில் அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காா்த்திகேயன் விசாரணையில் ஈடுபட்டாா்.
இதனிடையே, கடந்த ஜூலை 23ஆம் தேதி இரவு நேரத்தில் விவசாயியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த உறவினா்கள், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மறுபிரேதப் பரிசோதனைக்காக மனு செய்தனா். இந்த வழக்கில் மறுபரிசோதனைக்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து, 8 நாள்களாக உடலை வாங்க மறுத்துவந்த அணைக்கரைமுத்துவின் உறவினா்கள், ‘உயா்நீதிமன்ற உத்தரவை ஏற்று, மறுபிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் உடலைப் பெற்றுக்கொள்வோம். மறுபிரேதப் பரிசோதனைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதே வெற்றிதான். மறுபிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்’ எனத் தெரிவித்தனா்.