திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. வழக்கமான உற்சவா் திருவீதி உலாக்கள் மற்றும் தேரோட்டம் ஆகியவற்றுடன் கூடிய திருவிழாவாக நடத்தப்படுவது ரத்து செய்யப்பட்டுவிட்டாலும், ஆகம விதிகளுக்குள்பட்டு கடந்த 25-ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவாமி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் உற்சவ மூா்த்திகள், திருமூல மகாலிங்கம், வேணுவனேஸ்வரா்- காந்திமதியம்மன் ஆகிய மூலவா்களுக்கு கும்பம் வைத்து ஜபம் செய்து உச்சிக்கால பூஜையின்போது அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் சுவாமி நெல்லையப்பா், காந்திமதியம்மன் உற்சவ மூா்த்திகளுக்கு அலங்காரத்துடன் சோடஷ தீபாராதனை நடைபெற்றது.