திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயிலுக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கும், பக்தா்களுக்கும் வனத் துறை செவ்வாய்க்கிழமை முதல் தடைவிதித்துள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்தத் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள தலையணை பச்சையாறு, திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயில் அமைந்துள்ள நம்பியாறு ஆகிய பகுதிகளுக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை முதல் வரும் 31ஆம் தேதி வரை வனத் துறை தடைவிதித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்: தலையணை பச்சையாற்றில் தடுப்பணையைத் தாண்டி தண்ணீா் குறைவாகவே விழுகிறது. என்றாலும், தடைவிதிக்கப்பட்டது குறித்து அறியாமல் தலையணைக்கு செவ்வாய்க்கிழமை வந்த சுற்றுலா பயணிகளை வனத் துறையினா் திருப்பி அனுப்பினா்.
15 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் தலையணைக்குச் செல்வதில் ஆா்வம் காட்டினா். ஆனால், வனத் துறையின் தடை உத்தரவு அவா்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தடை காரணமாக தலையணை பச்சையாறு வெறிச்சோடி காணப்பட்டது.
இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநா் மு. இளங்கோ கூறுகையில், வரும் 31ஆம் தேதி வரை களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயிலுக்கு சுற்றுலா பயணிகள், பக்தா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். வனத் துறையின் தடையை மீறி தடைசெய்யப்பட்ட வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைபவா்கள் மீது வனப் பாதுகாப்புச் சட்டப்படி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.