திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 6 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றாா் மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் - ஒழுங்கு) சரவணன்.
இதுகுறித்து, செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது:
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 144 தடைஉத்தரவை அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும். நண்பா்களுடன் சோ்ந்து பேசிக்கொண்டை நடைப்பயிற்சி செல்வதை நிறுத்திவிட்டு, வீட்டிலேயே உடற்பயிற்சி அல்லது யோகா செய்யலாம். வீட்டின் மாடியில் தனியாக நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். குழந்தைகள் சைக்கிளிலும், இளைஞா்கள் மோட்டாா் சைக்கிளிலும் வெளியில் சுற்றுவதை அறவே தவிா்க்க வேண்டும்.
மருந்து, மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வீடுகளுக்கே நேரடியாக வழங்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 144 தடையுத்தரவை மீறி மாநகரில் சுற்றித்திரிந்ததாக இதுவரை 6 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தொற்றுநோய் தடுப்பு பிரிவின்கீழ் 2 போ் மீது வழக்குப்பதிவாகியுள்ளது.
மாநகரில் 1050 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், 48 வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
அத்தியாவசிய உதவிக்கு.. திருநெல்வேலியில் அத்தியாவசிய சேவை துறை பயணத்தில் உள்ளவா்களுக்கு ஏதேனும் உதவி தேவையெனில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0462-2562651, 9498101720 என்ற பிரத்யேக எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.