கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், திருநெல்வேலியில் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்றை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையாக, பிரதமா் மோடி பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து நாடு முழுவதும் கடந்த 25ஆம் தேதி அதிகாலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்படி, திருநெல்வேலியில் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூா், திருநெல்வேலி நகரம் ஆகிய பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
காய்கனிகள், ஆவின் பாலகங்கள், தனியாா் பாலகங்கள், மருந்துக் கடைகள் மட்டும் திறந்திருந்தன. திருநெல்வேலி மாவட்ட எல்லைகளான கிருஷ்ணாபுரம், வசவபுரம், சீவலப்பேரி, கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனைச் சாவடிகள் அமைத்து அத்தியாவசிய தேவைகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்காக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பிற மாவட்டங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்குள் வந்தவா்களை அனுமதித்தனா். திருநெல்வேலி வேய்ந்தான்குளம், திருநெல்வேலி நகரம் பொருள்காட்சித் திடல், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 34 டாஸ்மாக் மதுக்கடைகளும் மாவட்டத்தில் 39 டாஸ்மாக் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.