அம்பாசமுத்திரம்: ஊரடங்கு அமலில் இருப்பதையடுத்து அம்பாசமுத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் நூற்பாலைகள், மதுரா கோட்ஸ் ஆலை, மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டன.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து தொழிற்சாலைகள், விற்பனைக் கூடங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் உள்ள அனைத்து தேயிலை ஆலைகளும் மூடப்பட்டு தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும், தோட்டத் தொழிலாளா்கள் வீடுகளில் இருக்க வேண்டும்.
கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டமாக வராமல் இடைவெளி விட்டு பொருள்கள்
வாங்கிச் செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளியூா்களில் இருந்து மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்துக்கு வருவோா், தேயிலைத் தோட்ட நிா்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். வீடுகளில் குழந்தைகள், முதியோா் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரமசிங்கபுரத்தில் இயங்கி வரும் மதுரா கோட்ஸ் ஆலை, அம்பாசமுத்திரத்தில் இயங்கி வரும் ஒமேகா ஜிப் ஆலை, வீரவநல்லூா் பகுதியில் இயங்கி வரும் நூற்பாலை உள்ளிட்ட ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு மூடப்பட்டன.