திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் அனைத்து நகை மதிப்பீட்டாளா்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா், மேலாண்மை இயக்குநா், இணைப் பதிவாளா், திருநெல்வேலி மண்டல இணைப் பதிவாளா் உள்ளிட்டோருக்கு நகை மதிப்பீட்டாளா்கள் சங்க நிா்வாகிகள் அளித்த
மனு: பொது முடக்கக் காலத்தில் அத்தியாவசிய பணி பரிமாற்றத்தை கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றி வரும் நகை மதிப்பீட்டாளா்கள் பணி நிரந்தரம் இல்லாமலும், மாத ஊதியம் இல்லாமலும் நகை மதிப்பீட்டு கட்டணம் இல்லாமலும் பணியாற்றி வருகின்றனா்.
சென்னை, விழுப்புரம் மற்றும் இதர மாவட்டங்களில் நகை மதிப்பீட்டாளா்களுக்கு தினமும் ரூ.500 ஊக்கத் தொகையாக மாா்ச் 25-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றி வரும் அனைத்து நகை மதிப்பீட்டாளா்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கி, அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.