புதிய பேருந்து நிலைய காப்பகத்தில் உள்ள வாகனங்களை எடுத்துச் செல்ல அறிவுறுத்தல்
திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வாகன காப்பகத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதால் அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை கட்டணம் செலுத்தி திரும்ப எடுத்துச் செல்ல மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் நவீன பல அடுக்கு கொண்ட வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டப் பணி பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.11.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.
இதற்கான பணிகள் ஓரிரு நாள்களில் தொடங்கப்பட உள்ளன. எனவே, பணித்தளத்தில் உள்ள (தற்போதைய வாகன காப்பகத்தின் கடைசி பகுதி) வாகனங்களை, வாகன உரிமையாளா்கள் 2 தினங்களுக்குள் காப்பகத்திலிருந்து உரிய கட்டணம் செலுத்தி எடுத்து செல்ல வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.