வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி திருநெல்வேலி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி முருகன்குறிச்சி தனியாா் உணவகத்தில் அண்மையில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக வழக்குரைஞா் பிரம்மா மீது பட்டியல் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து இப்போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி நசீா் அகமது முன்னிலையில், மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா், மாநகா் காவல் துணை ஆணையா் (சட்டம் - ஒழுங்கு) சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சிவசூரிய நாராயணன், செயலா் செந்தில்குமாா், பொருளாளா் மாரியப்ப காந்தி உள்பட வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகளுடன் பேச்சு நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கூறுகையில், இப்பிரச்னையில் நியாயமான முடிவுகள் எட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, நாங்கள் நடத்தவிருந்த போராட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்றாா்.